உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு வழிகாட்டுகிறது அபெடா

 உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு வழிகாட்டுகிறது அபெடா

திருவண்ணாமலை: வேளாண் விளைபொருட்களை பதப்படுத்தி, மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்றுவதுடன் அவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசின் 'அபெடா' வழிகாட்டி வருகிறது என, அதன் மண்டல மேலாளர் ஷோபனா தெரிவித்துள்ளார். தமிழக வேளாண் துறை சார்பில், ஆண்டுதோறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் திருவண்ணாமலையில் நேற்று துவங்கியது. முதல்வர் ஸ்டாலின் கண்காட்சியை துவக்கி வைத்தார்.

இதில், வேளாண் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகள், திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் அபெடா அரங்கமும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து அதன் மண்டல மேலாளர் ஷோபனா, அளித்த பேட்டி: வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு மையம், இந்திய உணவு பொருட்களின் ஏற்றுமதிக்கான உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், உணவு பொருட்களின் தரத்தை உறுதிசெய்யவும் செயல்படுகிறது. மேலும், விவசாயிகளின் விளைபொருட்களை ஏற்றுமதி தரத்துக்கு உயர்த்த துணைபுரிகிறது. குறைந்த மதிப்பிலான விவசாய விளைபொருட்களை அதிக மதிப்புள்ளதாக மாற்ற ஆலோசனைகள் வழங்குகிறது. அறுவடைக்கு பின்னர் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கவும், அறுவடை செய்யப்பட்ட இடத்திலிருந்து விளைபொருட்களை சேகரிக்கவும், 'மொபைல்' வாகனத்தை விளைநிலத்தின் அருகே எடுத்துச்சென்று, விளைபொருட்களை பதப்படுத்தி கலன்களில் அடைத்து விற்கவும் உதவுகிறது.

புதிய தொழில்நுட்பம்

தற்போது, உணவு பொருட்களை பதப்படுத்த பல வகையான தொழில்நுட்பங்கள் உள்ளன. குறிப்பாக, 'ஓசோன் வாஷ்' எனப்படும் புதிய வகை தொழில்நுட்பமானது சாகுபடி செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்களில் படிந்துள்ள பூச்சி மருந்தின் எச்சத்தை நீக்குவதோடு, அவற்றை ஏற்றுமதி தரத்துக்கு ஏற்ற அளவில் இருக்கச் செய்கிறது. இதுதவிர, இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களின் ஏற்றுமதிக்கும் 'அபெடா' பெருமளவில் உதவுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் விளைபொருட்களுக்கு தமிழக உயிர்ம சான்றிதழ், துறை மூலமாக வழங்கப்படும். உயிர்ம சான்றிதழை 'அபெடா' அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், விவசாயிகள் விளைபொருட்களை எளிதில் ஏற்றுமதி செய்ய முடியும்.

துபாயில் கண்காட்சி

விரைவில், துபாயில் நடக்கவுள்ள உணவு பொருட்கள் கண்காட்சியில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்காக மேஜை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்வாயிலாக, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் உணவு பொருட்கள் மற்றும் படைப்புகளை குறைந்த செலவில் காட்சிப்படுத்த 'அபெடா' உதவுகிறது. 'அபெடா' அமைப்பானது கடந்த 38 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ