உலகளாவிய சவால்களை தாண்டி விமான சரக்கு ஏற்றுமதி அதிகரிப்பு
புதுடில்லி:சர்வதேச அளவில் வரிவிதிப்பு குழப்பங்கள் இருந்தபோதிலும், செலவைவிட நம்பகத்தன்மை, விரைவான டெலிவரிக்கு ஏற்றுமதியாளர்கள் முன்னுரிமை தருவதால், இந்தியாவின் வான்வழி சரக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்திய விமான போக்குவரத்து ஆணையகமான ஏ.ஏ.ஐ.,யின் தரவுகளில் இது தெரிய வந்துள்ளது. அதிகமாக மருந்துகள், செல்போன்கள், நகைகள், பூக்கள், பழங்கள், கடல் உணவு, அரிய வகை உலோகங்கள் ஆகியவையே வான்வழி சரக்கு ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன. 'சர்வதேச வர்த்தக பதற்றம், நிலையற்ற கொள்கைகள் காரணமாக, நடப்பாண்டில், வான்வழி சரக்கு போக்குவரத்தின் வளர்ச்சி 2.30 சதவீதம் குறையும்' என்று, உலக வங்கி கடந்த ஜூன் மாதம் கணித்திருந்தது. ஆனால் மாறாக, இந்திய வான்வழி சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. வான்வழி சரக்கு போக்குவரத்தில் தற்போது முன்னிலை வகிப்பது மருந்து பொருள் ஏற்றுமதிதான். தடுப்பூசிகள், தடுப்பூசி மருந்துகள், மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றுக்கு வெப்பநிலை கட்டுப்பாடு முக்கியம். பொதுவாக ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடல் வழியாக சரக்கு சென்றால் 50--60 நாட்கள் ஆகும். ஆனால், விமானங்களில் அனுப்பினால் 48--72 மணி நேரத்தில் உரிய இடத்தைச் சென்றடைந்துவிடும் என்பதால் அதை தேர்ந்தெடுக்கின்றனர். கடல் வழி சரக்கு போக்குவரத்து 50 - 60 நாட்கள் வான்வழி சரக்கு போக்குவரத்து 48 - 72 மணி நேரம்