| ADDED : ஜன 11, 2024 12:41 AM
சென்னை:தெற்கு ரயில்வே, கடந்த ஏப்ரல் முதல் டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், சரக்கு போக்குவரத்து வாயிலாக, 2,651 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பு:நடப்பு நிதியாண்டில் டிச., வரையிலான காலத்தில் 2,651 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, தெற்கு ரயில்வே சாதனை படைத்துள்ளது. இந்த காலக்கட்டத்தில், 2.94 கோடி டன் சரக்குகள் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இது, 6 சதவீதம் அதிகமாகும். நிலக்கரி, இரும்பு, உரங்கள், இரும்புத் தாது, சிமென்ட், உணவு தானியங்கள் போன்ற பொருட்கள் அதிகளவில் ஏற்றி அனுப்பப்பட்டு உள்ளன. பயணியர் பிரிவில், நடப்பு நிதியாண்டில் டிச., வரை 52.8 கோடி பேர் பயணம் செய்து உள்ளனர். இது கடந்த நிதியாண்டை விட, 12.8 சதவீதமாகும். மதிப்பீட்டு காலத்தில் பயணியர் பிரிவில் மட்டும் 5,255 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.