| ADDED : ஆக 24, 2024 12:33 AM
குவஹாத்தி, அசாமில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான 14 வயது சிறுமிக்கு நீதி கேட்டு, நேற்று மாநிலம் முழுதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வடகிழக்கு மாநிலமான அசாமில் நாகோன் மாவட்டத்தின் டிங் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 14 வயது சிறுமி ஒருவர், டியூஷன் முடிந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று பேர் அச்சிறுமியை வழிமறித்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அங்குள்ள ஏரிக்கரை அருகே வீசிச் சென்றனர். சிறிதுநேரம் கழித்து, அவ்வழியே சென்ற நபர், மயக்க நிலையில் சிறுமியை கண்டு போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்துள்ளதாகவும், மற்ற இருவரை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதற்கிடையே, சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கக்கோரியும் மாணவர் அமைப்பினர் உட்பட பல்வேறு அமைப்பினரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு வணிகர்களும் ஆதரவளித்து கடைகளை அடைத்தனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.போராட்டம் தீவிரமடைந்த நிலையில், டிங் பகுதியில் டி.ஜி.பி., சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதற்கிடையே சமூக வலைதளத்தில் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெளியிட்ட அறிக்கையில், 'சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம், மனித குலத்திற்கு எதிரான செயல். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தருவோம்' என, கூறியுள்ளார்.