புதுடில்லி, மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மார்ச் 21ல் கைது செய்யப்பட்டார்.லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, ஜூன் 1 வரை அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி, மே 10ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜூன் 2ல் திஹார் சிறையில் சரணடையும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி அன்றைய தினம், சரணடைந்தார். இந்த வழக்கில் ஜாமின் கோரி, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை, கடந்த 20ல் விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கியது. சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அடுத்த நாளே டில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான விடுமுறை கால அமர்வு முன், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு கூறியதாவது:இந்த வழக்கில், அமலாக்கத் துறை முன்வைத்த வாதங்களை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும், வழக்கில் வாதாட அமலாக்கத் துறைக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அமர்வு கூறியது.டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.