| ADDED : ஜூன் 27, 2024 06:52 AM
கொப்பால்: விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு 10 ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை என்பதால், தனக்கு பெண் தேடி தரும்படி, கொப்பால் கலெக்டரிடம் ஒரு வாலிபர் மனு அளித்தார்.கொப்பால் மாவட்டம், கனககிரி தாலுகாவில் உள்ள ஏ.பி.எம்.சி., சமுதாய பவனில், நேற்று, மக்கள் குறை தீர் முகாம் நடந்தது. இதில், கலெக்டர் நலின் அதுல் உட்பட உயர் அதிகாரிகள், பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். சில அடிப்படை வசதிகள் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன.சில பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இந்த வேளையில், சங்கப்பா என்ற வாலிபர், கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். தொடர்ந்து, மைக்கை வாங்கி அவர் பேசியதாவது:நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். திருமணம் செய்து கொள்வதற்காக, கடந்த 10 ஆண்டுகளாக, எனக்கு பெண் தேடி வருகிறேன். ஆனால், ஒரு பெண் கூட, என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு பெண் பார்த்து கொடுக்க வேண்டும்.அரசு சார்பில், விவசாய பிள்ளைகளின் திருமணத்துக்காக சிறந்த திட்டம் வகுக்க வேண்டும். இதன் மூலம், விவசாய பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற உதவ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கலெக்டர் உட்பட உயர் அதிகாரிகள், திடீரென்று சிரித்தனர். பின், அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக கலெக்டர் உறுதி அளித்து அனுப்பி வைத்தார்.