| ADDED : ஜூலை 24, 2024 11:28 PM
துமகூரு, : தனியார் நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கி, பிட்காயின்கள் திருடிய வழக்கில், பிரபல ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு ஜாமின் கிடைத்துள்ளது.பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணா என்ற ஸ்ரீகி, 29; பிரபல ஹேக்கர். கடந்த 2017ல் துமகூரில் இயங்கி வரும், யூநோ காயின் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கிய ஸ்ரீகிருஷ்ணா, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான 60 பிட்காயின்களை திருடினார்.இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீ கிருஷ்ணா, அவரது நண்பர்கள் ரமேஷ், ராபின் ஆகியோர் கைது செய்யப்பட்டு, துமகூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது மார்ச் மாதம் துமகூரு 1வது சிவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் ஸ்ரீ கிருஷ்ணா உட்பட மூன்று பேரும், ஜாமின் கேட்டு துமகூரு 1வது சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுவை நீதிபதி சுப்ரமணியா விசாரித்தார். நேற்று நடந்த மனு மீதான விசாரணைபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், மூன்று பேருக்கும் ஜாமின் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி 3 பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.