| ADDED : ஜூன் 28, 2024 11:07 PM
கோலார்: ''கர்நாடகா மாநிலத்தில் எங்கும் எதிலும் இலவசம்' என்ற காங்கிரஸ் அரசு இப்போது, விலையை உயர்த்தி வருகிறது. கஜானா காலியாகி உள்ளது,'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் குற்றஞ்சாட்டினார்.விலைவாசி உயர்வை எதிர்த்து நேற்று கோலார் கலெக்டர் அலுவலகம் முன், பா.ஜ., வினர் தர்ணா நடத்தினர். அப்போது எதிர்க்கட்சிதலைவர் அசோக் பேசியதாவது:முதல்வர் சித்தராமையா எப்போதுமே முதுகில் குத்துபவர். முன்பு, குமாரசாமியின் முதுகில் குத்தினார். இப்போது துணை முதல்வர் சிவகுமார் முதுகில் குத்துகிறார்.தேர்தலுக்கு முன்பு காங்கிரசார், அனைத்துமே இலவசம், இலவசம் என்றனர். கஜானாவை காலி செய்து விட்டனர். குழந்தைகள் குடிக்கும் பாலின் விலையையும் உயர்த்திவிட்டனர். குடும்ப தலைவிகளுக்கு 2,000 ரூபாய் கொடுத்ததை, கணவன்மார்கள் குடிப்பதற்கு பறித்துச் செல்கின்றனர்.முறைகேடு புகாரில் அமைச்சராக இருந்த நாகேந்திரா ராஜினாமா செய்தார். ஆனால் முக்கியமானவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஊழல்காரர்கள் வெளியில் நடமாட்டத்தில் உள்ளனர். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பெட்ரோல் டீசல், காய்கறிகள், பால், விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். கோலார் பா.ஜ., முன்னாள் எம்.பி., முனிசாமி, மாவட்ட தலைவர் வேணுகோபால், முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி, தங்கவயல் நகர பா.ஜ., தலைவர் சுரேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.