விஜயபுரா, : ''கர்நாடகா மாநில பா.ஜ., தலைவர் ஆவேன்,'' என்று, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.விஜயபுரா பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் நேற்று அளித்த பேட்டி:முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா ஆகியோருடன் என்னை சமரசம் செய்ய வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய சட்டம்
எனக்கு கட்சியின் தேசிய பொது செயலர் பதவி தருவதாக கூறினர். அந்த பதவியை விஜயேந்திராவுக்கு கொடுக்கட்டும். நான் மாநில தலைவர் ஆவேன். ஜனநாயக அமைப்பில் யார், எங்கிருந்து வேண்டுமென்றாலும் போட்டியிடலாம். ஆனால் தேர்தலில் போட்டியிடும் விஷயத்தில், தேர்தல் ஆணையம் சில சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். ஒரு தொகுதியில் எம்.பி., மற்றும்-- எம்.எல்.ஏ.,க்களாக இருப்போர், மற்றொரு தொகுதியில் போட்டியிட அனுமதிக்க கூடாது. இது தொடர்பாக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். பணம் இல்லை
லோக்சபா தேர்தலில் பாகல்கோட் அல்லது பெலகாவியில் எத்னால் போட்டியிடுவார் என்று சிலர் கதை கட்டி விட்டனர். பெட்ரோல், டீசல் விலையை அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம், மாநில அரசு திவால் ஆனது தெரிய வந்து உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை. அமைச்சர்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் தொகுதிகளுக்கு நிதி கிடைக்கவில்லை என்று புலம்ப ஆரம்பித்து விட்டனர்.வாக்குறுதி திட்டங்கள் தேவை இல்லை என்று முதல்வருக்கு அவரது கட்சியினரே அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். காங்., அரசில் இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய் துறை அமைச்சரின் கிருஷ்ண பைரேகவுடா தொகுதியான பேட்ராயனபுராவில் அரசு நிலத்தை, இரண்டு அமைச்சர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர். சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் செய்யும் ஊழல் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.