| ADDED : ஜூன் 29, 2024 11:08 PM
பெங்களூரு: குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை, அடுத்த மாதம் இறுதியில் பிடதியில் துவங்கப்பட உள்ளது.பெங்களூரு நகரில் குப்பை பிரச்னை, மாநகராட்சிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. மட்கும், மட்காத குப்பையை பிரித்துக் கொடுக்கும்படி, பொதுமக்களிடம், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் கேட்டுக் கொண்டாலும், பெரும்பாலானோர் அப்படி பிரித்துக் கொடுப்பது இல்லை. நகரில் தினமும் சேரும் குப்பையை அகற்றுவதும், மாநகராட்சிக்கு பெரிய சவாலாக இருந்தது.இந்நிலையில், பா.ஜ., ஆட்சியில் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க, பெங்களூரு அருகே பிடதியில் 260 கோடி ரூபாய் செலவில் புதிய ஆலை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.இந்த ஆலை கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சில தினங்களுக்கு முன்பு, குப்பையில் இருந்து மின்சாரம் எடுப்பதற்கு சோதனையும் நடத்தப்பட்டது.அடுத்த மாதம் இறுதியில் இருந்து, இந்த ஆலை முழுமையாக பயன்பாட்டிற்கு வர உள்ளது. தினமும் 600 டன் குப்பை கழிவுகளில் இருந்து 11.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இதன் மூலம் பெங்களூரில் மின்தடை ஏற்படாது என்றும் சொல்லப்படுகிறது.