| ADDED : ஜூலை 09, 2024 09:28 PM
புதுச்சேரி:புதுச்சேரியில் அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் தொடக்க பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, மொத்தம் 416 அரசு பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் இரண்டு ஆண்டு முன்பு வரை தமிழக பாட நுால் கழக பாட திட்டங்களை பின்பற்றி வந்தன.தற்போது, அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, இந்தாண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின்படி, அரசு பள்ளிகளில் தினசரி பாட வேளை ஏழில் இருந்து எட்டாக உயர்த்தியதுடன், பள்ளிகள் துவங்கும் நேரத்தையும் பள்ளி கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது.அதன்படி, காலை 9:30 மணிக்கு பதிலாக, காலை 9:00 மணிக்கு பள்ளிகள் துவங்கி, மாலை 4:20 மணிக்கு பள்ளி முடியும். காலை 10:45 முதல் 10:55 வரையிலும், மாலையில் 2:50 முதல் 3:00 மணி வரை இரு இடைவெளிகள் விடப்படும். மதியம் 12:25 முதல் 1:30 மணி வரை மதிய உணவு இடைவெளி. காலையில் நடக்கும் நான்கு பாட வேளைகள் தலா 45 நிமிடங்களும், மதியத்திற்கு பிறகு நடக்கும் பாட வேளைகள் தலா 40 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.இந்த நடைமுறை ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என, பள்ளி கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.