பெங்களூரு: நீதிமன்றங்களில் சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளின் பெயர்களை, மூன்று முறை உரத்த குரலில் அழைக்கும், பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க, காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து, சட்டத் துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:தற்போதுள்ள சட்டத்தின்படி, நீதிமன்றங்களில் சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளை, மரியாதை இன்றி உரத்த குரலில் அழைக்கும் நடைமுறை உள்ளது. பகிரங்கமாக பெயர் சொல்லி அழைப்பதால், அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுகிறது.நியாயம் கேட்டு, நீதிமன்றத்தை நாடுபவர், நியாயத்தை நிலைநாட்ட நீதிமன்றத்துக்கு உதவும் நோக்கில், சாட்சியம் அளிக்க வருவோரை கவுரவத்துடன் நடத்த வேண்டும். எனவே பெயர் சொல்லி அழைக்கும் பழைய நடைமுறைக்கு, முடிவு கட்ட அரசு முன் வந்துள்ளது. இதற்காக சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது.சட்டம் மற்றும் கொள்கைகள் - 2023க்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது. விசாரணை நேரத்தில், குற்றவாளி கூண்டுகளில், சாட்சிகள், குற்றவாளிகள் அமர்ந்து கொள்ள வசதி செய்வது உட்பட பல மேம்பாடுகள் திருத்த சட்டத்தில் இருக்கும்.பி.எம்.டி.சி.,க்கு 363.832 கோடி ரூபாய் செலவில், புதிதாக 840 பஸ்கள் வாங்கப்படும். இந்திரா உணவகங்களுக்கு, சமையலுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க, 84.58 கோடி ரூபாய் வழங்கப்படும்.பெங்களூரு உட்பட மற்ற நகரங்களில் உள்ள இந்திரா உணவகங்களில், முதற்கட்டமாக 138 உணவகங்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் 186 உணவகங்களுக்கும் தேவையான உபகரணங்கள் வாங்க, டெண்டர் அழைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மாநில அரசு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த முடியாது என, நிதித்துறை அதிகாரிகள் விவரித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.ஊதிய உயர்வு தொடர்பான அறிக்கை வந்து, நான்கு மாதங்கள் ஆகியும் சிபாரிசுகளை இன்னும் செயல்படுத்தவில்லை. அனைத்து துறைகளின் ஊழியர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். போராட்டத்தை துவங்கும்படி, ஒரே குரலில் வலியுறுத்துகின்றனர். நாளை, சிக்கமகளூரில் நடக்கும் அரசு ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.- சி.எஸ்.ஷடக்ஷரி, தலைவர், அரசு ஊழியர் சங்கம்