மாணவர்களுக்காக கூடுதல் பஸ் இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு
பெங்களூரு: 'சக்தி' திட்டத்தால், பஸ்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இவர்களின் வசதிக்காக, கூடுதல் பஸ்கள் இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்து உள்ளது.கர்நாடக காங்கிரஸ் அரசு, பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, 'சக்தி' திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், பெண்கள் தீர்த்த யாத்திரை, சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது. அனைத்து வழித்தடங்களில் இயங்கும் பஸ்களும், பயணியரால் நிரம்பியுள்ளன. இதன் விளைவாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பஸ்கள் கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். படிகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணிப்பதை பல இடங்களில் காண முடிகிறது. கூடுதல் பஸ்களை இயக்கும்படி, மாணவர்களும், பயணியரும் வலியுறுத்து கின்றனர். இதை ஏற்று கொண்ட, கே.எஸ்.ஆர்.டி.சி., கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:மாணவ - மாணவியரின் வசதிக்காக, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். பள்ளி, கல்லுாரிகள் அதிகம் உள்ள வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க, முடிவு செய்துள்ளோம். கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் புதிதாக 814 பஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் 500 பஸ்கள் இயக்கப்படும். புதிய பஸ்கள் வாங்கவும், மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்கள் புதிய வழித்தடங்களில் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.