திருவனந்தபுரம்: வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்த ஒருவரின் உடலுக்கு, இரு குடும்பங்கள் உரிமை கோரியது. கடைசி நேரத்தில், அடையாளம் காண நெயில் பாலிஷ் உதவியது. இந்த சம்பவம் கண் கலங்க வைத்தது.கேரள மாநிலம் வயநாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மண்ணில் புதையுண்டு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 206 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அடையாளம் காண முடியாத உடல்களுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு செய்து, அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அடையாளம்
உடலில் இருந்த காயத்தின் தழும்புகள் மற்றும் மச்சம் ஏதோ ஒன்றை மட்டுமே வைத்து அது தமது உறவுதான் என கண்ணீர் விட்டபடி, அடையாளம் காண்பித்து செல்கின்றனர். அந்த வகையில், மலப்புரத்தில் உள்ள சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட உடலுக்கு பிரெஸ்நெவ் என்ற நபர் அடையாளம் காண வந்திருந்தார். நிலச்சரிவு ஏற்பட்ட போது, தனது மகள் அனாமிகா நீலநிற நெயில் பாலிஷ் போட்டிருந்தார். இது தான் எனது மகளின் உடல் என கண்ணீர் மல்க அடையாளம் காண்பித்தார்.நெயில் பாலிஷ்
மற்றொரு குடும்பத்தினர் இது தனது மகள் உடல் என உரிமை கோரினர். ''உங்களது மகள் நெயில் பாலிஷ் போட்டிருந்தாரா?'' என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தனது மகளுக்கு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் கிடையாது என பதில் அளித்தனர். ''நிலச்சரிவில் மண்ணில் புதையுண்டதால் நகத்தின் நிறம் மாறி உள்ளது'' என குடும்பத்தினர் தெரிவித்ததால், அதிகாரிகள் திணறி போயினர். இரு குடும்பத்தினர் முன்னிலையில் நகத்தை அதிகாரிகள் கீறி காண்பித்த போது, அது நெயில் பாலிஷ் என நிரூபிக்கப்பட்டது. இறுதியாக, பிரேஷ்நேவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, மேப்பாடி மாரியம்மன் கோயில் அருகே உள்ள சமுதாய மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.யார் உடல் இது!
மேப்பாடியில் வசித்து வருபவர் பிரெஸ்நெவ். இவரது மகள் அனாமிகா 9ம் வகுப்பு படித்து வந்தார். நிலச்சரிவு ஏற்பட்ட போது, அனாமிகா அவரது பாட்டியில் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, அனாமிகா ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.