அனைத்து கட்சி கூட்டம் ஏன்? அரசுக்கு குமாரசாமி கேள்வி!
''தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்ட பின், கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்தியுள்ளது,'' என மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டினார்.டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்ட பின், எங்களுடன் கூட்டம் நடத்த முற்பட்டுள்ளனர். அனைத்து கட்சிகள் கூட்டத்தில் எதை பற்றி ஆலோசித்தனர். கண் துடைப்புக்காக நடத்தப்படும் கூட்டத்துக்கு, முந்திரி, பாதாம் தின்பதற்காக நாங்கள் செல்ல வேண்டுமா.மத்திய அமைச்சர் நடத்தும் கூட்டத்துக்கு, அதிகாரிகள் செல்ல கூடாது என, அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். எங்களுக்கு கவுரவம் கொடுக்காமல், எங்களிடம் என்ன எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பதால், நான் மாண்டியாவுக்கு சென்றிருந்தேன். நான் இவர்களிடம் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டுமா.மாநில காங்., அமைச்சர்கள் பேச்சுக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களிடம் கையெழுத்து பெற, கூட்டத்துக்கு அழைத்தனரா. எங்களை எந்த விதத்தில் நடத்துகின்றனர். முதலில் அதை சரி செய்து கொள்ளட்டும்.எங்கள் பணியை, நாங்கள் சரியாக செய்கிறோம். அரசின் சொத்துகளை கொள்ளையடிக்கும் வேலையை, நாங்கள் செய்யவில்லை. சிவகுமாரை வெற்றி பெற வைத்து, முதல்வராக்க முயற்சித்தவர்களையே புறக்கணித்தனர். நான் கார்ப்பரேஷனில் குப்பையை சுமந்திருக்கிறேன்.முதல்வர் சித்தராமையா, 'மூடா'வில் இறந்தவரின் பெயரில், 'டீனோடிபிகேஷன்' செய்துள்ளார். சிவகுமார் நகர வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது, பெனகானஹள்ளியில் முறைகேடு செய்துள்ளார். நில மோசடியில் ஈடுபட்ட இவர், தன் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு, அதை வாபஸ் பெற எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தார்.சிவகுமார் மீது வழக்கு தொடுத்தவர், ஒரு நேர்மையான நபர். எனக்கு அவர் நன்கு அறிமுகம் உள்ளவர். சிவகுமார் இதுவரை பண பலத்தாலும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தும் அரசியல் நடத்துகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -