UPDATED : டிச 04, 2024 10:38 PM | ADDED : டிச 04, 2024 10:32 PM
புதுடில்லி: '' வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், சிறுபான்மையினரை இனப்படுகொலை செய்கிறார்,'' என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி உள்ளார்.வங்கதேசத்தில் எழுந்த போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, டில்லியில் தங்கி உள்ளார்.இதன் பிறகு தற்போது முதன்முறையாக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் பேசினார்.அப்போது ஷேக் ஹசீனா கூறியதாவது: வங்கதேச பிரதமர் அலுவலகத்தை நோக்கி ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி இருந்தால், பலரின் உயிர் பறிபோயிருக்கும். இது 25 -30 நிமிடங்களில் நடந்து இருக்கும். நான் வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டேன். இருப்பினும், பாதுகாவலர்களிடம், என்ன நடந்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் எனக்கூறினேன். இன்று, நான் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கூறுகின்றனர். ஆனால், முகமது யூனுஸ் தான் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட விதத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளார். இந்த இனப்படுகொலையின் மூளையாக மாணவ சங்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முகமது யூனுஸ் ஆகியோர் உள்ளனர்.ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் என யாரையும் விடவில்லை. தேவாலயங்கள் சூறையாடப்பட்டுள்ளன. கோவில்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினால், அந்த மதத்தின் தலைவரை கைது செய்கின்றனர். எதற்காக சிறுபான்மையினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அவர்களை இரக்கமின்றி துன்புறுத்துவது ஏன்? அங்கு மக்களுக்கு நீதி கேட்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. நான் ராஜினாமா செய்யக்கூட நேரம் தரப்படவில்லை. இவ்வாறு ஷேக் ஹசீனா கூறினார்.