உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் முதற்கட்ட தேர்தல் நிறைவு 64.46 சதவீதம் ஓட்டு பதிவு

பீஹார் முதற்கட்ட தேர்தல் நிறைவு 64.46 சதவீதம் ஓட்டு பதிவு

பாட்னா: பீஹார் சட்டசபைக்கு நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலில், கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 64.46 சதவீத ஓட்டுகள் பதிவாகின. பீஹாரில், மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக நடக்கின்றன. இதில், 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்தது.

ஆர்வம்

இதில், பாட்னா, வைஷாலி, முங்கேர், நாலந்தா, போஜ்பூர் உட்பட, 18 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணி வரை நடந்தது. பக்தியார்பூர், மகிஷி உட்பட 50க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில், பாதுகாப்பு காரணங்கள் கருதி மாலை, 5:00 மணிக்கே ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், ராஜிவ் ரஞ்சன் சிங், நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் தங்கள் தொகுதி களில் ஓட்டு செலுத்தினர். ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், 'மஹாகட்பந்தன்' கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், குடும்பத்துடன் வந்து ஓட்டளித்தார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் ஓட்டளித்தார். பெரும்பாலான தொகுதிகளில், காலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். வழக்கத்தைவிட, இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். மாலை 5:00 மணி வரை, 60.18 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடைசி நேரத்திலும், பலர் காத்திருந்து ஓட்டளித்த நிலையில், முதற்கட்ட தேர்தலில் 64.46 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. 73 ஆண்டுகளுக்கு பின், அதிகளவு ஓட்டுப்பதிவு இந்த முறை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முடிவு அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவாக, 67.32 சதவீத ஓட்டுகள் பதிவானது. இரண்டாம் கட்டமாக, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கை, வரும் 14ம் தேதி நடத்தப் பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் மீது தாக்குதல்

துணை முதல்வரும், லக்கிசாராய் தொகுதி பா.ஜ., வேட்பாளருமான விஜய்குமார் சின்ஹா, தன் தொகுதியில் காலையிலேயே ஓட்டளித்தார். பின், தன் தொகுதியில் ஓட்டுப்பதிவு முறையாக நடப்பதை பார்வையிட சென்றார். 'கான்வாய்' எனப்படும் கார் அணிவகுப்பில் கோரியாரி கிராமம் வழியாக விஜய் குமார் சின்ஹா சென்ற போது, அப்பகுதியில் இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள தொண்டர்கள் வழிமறித்தனர். அவருக்கு எதிராகவும், பா.ஜ.,வைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, காரில் இருந்து வெளியே வந்த விஜய்குமார் சின்ஹா, அங்கு திரண்டு இருந்தவர்களை கலைந்து போகும்படி வலியுறுத்தினார். இதை ஏற்க மறுத்த கூட்டத்தினர், அவர் மீது கற்கள் மற்றும் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது, விஜய் குமார் சின்ஹாவின் பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக, காரில் ஏற்றி அனுப்ப முயன்றனர். ராஷ்ட்ரீய ஜனதா தள தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்ததால், துணை முதல்வரின் கான்வாயால் நகர முடியவில்லை. இதையடுத்து, மாவட்ட துணை கலெக்டர், எஸ்.பி., ஆகியோரை தொடர்பு கொண்ட விஜய் குமார் சின்ஹா, நிலைமையை எடுத்துக் கூறினார். இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த போலீசார், கூட்டத்தை விரட்டி, துணை முதல்வர் கான்வாய் போக வழி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Venugopal S
நவ 07, 2025 10:26

நேற்று இரவு வரை அறுபது சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு இன்று அறுபத்து நான்கு சதவீதமாக உயர்ந்து விட்டது என்றால் தங்கள் வழக்கமான வேலையை காண்பித்து விட்டார்கள் போல் உள்ளதே!


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 07, 2025 08:49

தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட மறுப்பதில் இருந்தே தேர்தல் ஆணையத்தின் நேர்மையில் சந்தேகம் வருகிறது


duruvasar
நவ 07, 2025 07:58

திராவிட மாடலை இந்தியாவெங்கும் கொண்டுசெல்வேன் என்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலனின் சூளுரை நிஜமாகவே பிஹாரில் வேலைசெய்ய ஆரம்பித்திருக்கிறது. துணைமுதல்வரின் அப்பாத்தாவின் இளமை கால வரலாற்றை எழுதி நாங்கள் வந்துடோவ்ம் என்பதை உறுதி செய்வார்கள். வாழ்க திராவிடம் வளர்க ஜங்கிள் ராஜ்ஜியம்


Priyan Vadanad
நவ 07, 2025 07:11

பீகார் மக்கள் தெளிவாகிவிட்டதால் துணை முதல்வர் கார் வந்த வழியாயல்லவா விரட்டப்பட்டது.


சமீபத்திய செய்தி