| ADDED : நவ 26, 2025 06:49 AM
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், குடிநீருக்கு பதில் தவறுதலாக அமிலம் ஊற்றி தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தின் ஆறு பேர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கட்டால் என்ற பகுதியில் வசிப்பவர் சந்து சன்யாசி. இவர், கடந்த 23ல், குடும்பத்தினருடன் வீட்டில் உணவு சாப்பிட்டார். சாப்பிட்ட அனைவருக்குக்கும் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளும் சந்து சன்யாசி வீட்டில் ஆய்வு செய்தனர். போலீசார் கூறியதாவது: செம்பு, எவர் சில்வர் பாத்திரங்களை தயாரிக்கும் பணியை சந்து சன்யாசியின் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இதனால், அவர்களது வீட்டில் எப்போதும் அமிலம் இருக்கும். இந்த அமிலத்தை, குடிநீர் சேமிக்கும் பாத்திரத்தில் வைத்துள்ளனர். கடந்த 23ல், சந்து சன்யாசியின் வீட்டிற்கு வந்த உறவுக்கார பெண் சமையல் செய்துள்ளார். அவர், தண்ணீர் என நினைத்து, பாத்திரத்தில் இருந்த அமிலத்தை பயன்படுத்தி உள்ளார். இந்த உணவை சாப்பிட்ட சந்து சன்யாசி, இரு குழந்தைகள் உட்பட ஆறு பேருக்கும் வயிற்று வலி, வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட ஆறு பேரும் கொல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தவறுதலாக அமிலம் கலக்கப்பட்டதா அல்லது பழிவாங்கும் செயலா என, விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.