உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் மீண்டும் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள்; தரிசனம் செய்யாமல் திரும்பும் நிலை

சபரிமலையில் மீண்டும் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள்; தரிசனம் செய்யாமல் திரும்பும் நிலை

சபரிமலை, : சபரிமலையில் மீண்டும் நீண்ட காத்திருப்பு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்யாமல் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சபரிமலை சீசனை சுமுகமாக முடிப்பதில் தேவசம் போர்டும், கேரள அரசும் தோல்வியை நோக்கி செல்கிறது.சபரிமலையில் திருப்பதி மாடல் என்ற திட்டத்தை கேரள அரசு அறிவித்து ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அதற்கான எந்த ஏற்பாடுகளும் இங்கு செய்யப்படவில்லை. மண்டல காலத்தில் பக்தர்கள் வேதனையுடனும் ,கண்ணீருடனும் 18 மணி நேரம் காத்திருந்தும் ஐயப்பனை பார்க்க முடியாமல் திரும்பச் சென்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்தது.தரிசனத்திற்கு 18 மணி நேரம், பிரசாதத்துக்கு நான்கு மணி நேரம், அன்னதானம் சாப்பிட வேண்டும் என்றால் ஆறு மணி நேரம் இப்படி எல்லா இடங்களிலும் கியூவில் நின்று தளர்ந்து விடுகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் எந்த தீர்வும் தேவசம்போர்டிடம் இல்லை. அரவணை தட்டுப்பாடு காரணமாக ஒருவருக்கு ஐந்து டின் மட்டுமே கொடுக்கப்படுவதால் அங்கும் நீண்ட கியூ காணப்படுகிறது

கதறும் பக்தர்கள்

மகர விளக்கு சீசன் டிச. 30 -ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மண்டல காலம் போலவே இப்போதும் பக்தர்கள்கூட்டம் அலைமோதுகிறது. ஒரு நாளில் எத்தனை பக்தர்களை அனுமதிக்க முடியும் என்ற கணக்கில்லாத தேவசம்போர்டு தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் பம்பையில் இருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தல் வருவதற்கு பக்தர்கள் 14 முதல் 16 மணி நேரம் கியூவில் நிற்கின்றனர்.அளவுக்கு அதிகமான கூட்டம் வந்ததால் பம்பையில் பக்தர்கள் தடுக்கப்பட்டனர். வாகனங்கள் பழையபடி மீண்டும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு மட்டும் இப்பிரச்னை உள்ளதற்கு கேரளா அரசோ, தேவசம்போர்டோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. காணிக்கை வருமானத்திலும் குறைவு, பக்தர்கள் எண்ணிக்கையிலும் குறைவு. ஆனால் இந்த நீண்ட காத்திருப்பு ஏன் என்ற கேள்விக்கு யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை. மாறாக பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறுகின்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

நெரிசலுக்கு காரணம்

நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் 18 படி ஏறி தரிசனத்திற்கு சென்ற தஞ்சாவூர் பக்தர் தயானந்த் 24, என்பவரை போலீசார் தாக்கிய சம்பவம் விவாதத்தை கிளப்பியுள்ளது. இவர் சன்னிதானம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்ட காத்திருப்பு, துாக்கமின்மை காரணமாக தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக பம்பை திரும்புவதற்கு பதிலாக சன்னிதானத்திலேயே ஆங்காங்கே துாங்குவதால் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.நேற்று முன்தினம் காலையில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட 15 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் நேற்று மதியம் வரை சன்னிதானம் அருகே செல்ல முடியவில்லை. இந்த குழுவை சேர்ந்த ஆனந்த உட்பட சில பக்தர்கள் தரிசனம் செய்யாமல் திரும்பி விட்டனர். சிலர் தங்கள் இரு முடியை பிற பக்தர்களிடம் கெஞ்சி கூத்தாடி அபிஷேகம் செய்யும்படி கூறிவிட்டு திரும்புகின்றனர்.பக்தர்களின் சிரமங்களுக்கும் கஷ்டங்களுக்கும் கண்ணீருக்கும் விடை கிடைக்காமல் மண்டல, மகர விளக்கு கால சீசன் இன்னும் சில நாட்களில் நிறைவு பெற உள்ளது. மிகப்பெரிய புண்ணிய ஸ்தலத்தில் ஒரு சீசனை நடத்துவதில் தேவசம் போர்டும், அரசும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை