புதுடில்லி: சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. பெண்கள் தினத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று (மார்ச் 08) சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பெண்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதை கார்டூன் மூலம் எடுத்துரைக்கிறது. விண்வெளி துறையில் பெண்கள் சிறந்து விளங்குவதையும் டூடுல் விளக்குகிறது.தலைவர்கள் வாழ்த்து
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:பிரதமர் மோடி
மகளிர் தினத்தன்று நமது பெண் சக்திக்கு தலைவணங்குகிறேன். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி, நமது அரசு அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டுள்ளது.இன்று, வாக்குறுதியளித்தபடி, பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்களால் எனது சமூக பக்கம் ஒப்படைக்கப்படும்.காங்கிரஸ் எம்.பி., ராகுல்
பெண்கள் நமது சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றனர். பெண்களின் வலிமை மற்றும் உறுதிப்பாடு நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. இந்த சர்வதேச மகளிர் தினத்தில், ஒவ்வொரு பெண்ணும் தனது கனவை அடைய, அனைத்து தடைகளையும் உடைக்க உங்களுக்காக நான் துணை நிற்பேன்.தமிழக பா.ஜ., தலைவர், அண்ணாமலை
சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் சுதந்திரத்தையும், சமூகம், பொருளாதாரம், கலாசாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளையும் அங்கீகரித்துப் போற்றவும், பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாட்டை ஒழிக்கவும், சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றவும், இந்த நாளில் உறுதி ஏற்போம்.முதல்வர் ஸ்டாலின்
உலக மகளிர் தின வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், 'வணக்கம், நல்லா இருக்கீங்களா, மாதம் தோறும் ஒரு கோடியே 14 லட்சம் சகோதரிகள் ஆயிரம் ரூபாய் உரிமை தொகைகள் பெறுகிறார்கள். தமிழக மாணவ, மாணவிகள் அப்பா அப்பா என்று வாய் நிறைய அழைக்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.அ.தி.மு.க., பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,
இன்றைக்கு பெண்களே இல்லாத துறை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவும், புரட்சிப் பெண்ணாகவும் விளங்கி வருகின்றார்கள்.பெண்ணுரிமை வாழட்டும்! வளரட்டும்! என்ற வாழ்த்துதலோடு, மீண்டும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பெண்மையை வணங்குவோம்! பெண்மையைப் போற்றுவோம்! பெண்மையால் பெருமை கொள்வோம். அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன்
மகளிர் தின நல்வாழ்த்துகள். வாழ்க்கையில் எதிர்வரும் சோதனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை உறுதியோடு எதிர்கொண்டு பிறப்பளிக்கும் அன்னையாக, தோழியாக, தங்கையாக, மனைவியாக, மகளாக என வாழ்க்கையின் அனைத்துவித பரிமாணங்களிலும் இன்றியமையாத அர்ப்பணிப்பை வழங்கி வரும் மகளிர் ஒவ்வொருவரின் மகத்துவமிக்க பங்களிப்பை நாம் அனைவரும் போற்றி வணங்கிடுவோம்.முன்னாள் முதல்வர், பன்னீர் செல்வம்
“ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப, பெண்கள் அடைந்துள்ள வளர்ச்சியைப் போற்றும் வகையிலும், சமுதாயத்திற்கு பெண்கள் தந்த பங்களிப்பினை பாராட்டும் வண்ணமும், அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் உலக மகளிர் தினம் அனுசரிக்கப் படுகிறது. இந்த இனிய நாளில் எனது நெஞ்சார்ந்த உலக மகளிர் தின நல்வாழ்த்துகளை அனைத்து மகளிருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.