புதுடில்லி : ஓய்வூதியம், இன்சூரன்ஸ், மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்ட நிதி மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினால் நிறைவேற்றப்படாமல் இருப்பதால், இவற்றில் சீர்திருத்தம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. இன்சூரன்ஸ் துறையில் நேரடி அன்னிய முதலீடு, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் அதிகப்படியான வட்டி உள்ளிட்டவற்றை, எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. எனவே, முக்கிய நிதி மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல், பார்லிமென்டில் தேங்கிக் கிடக்கின்றன.
எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில், இந்த நிதி மசோதாக்களில் சீர்திருத்தம் செய்வதற்காக, மத்திய நிதியமைச்சகம் ஒன்பது கமிட்டிகளை அமைக்க உள்ளது. இந்திய மேலாண்மை நிறுவன வல்லுனர்கள் உள்ளிட்டோர், இந்த கமிட்டியில் இடம் பெற உள்ளனர். ஆந்திராவில் செயல்படும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வட்டி விகிதத்தைப் பின்பற்றாமல் செயல்படுவதாக, புகார்கள் வருகின்றன. எனவே, இந்த ஆலோசனை கமிட்டி இந்தத் துறையினருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும். சுகாதார இன்சூரன்ஸ், வங்கித் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகளுக்கும், இந்த கமிட்டி ஆலோசனைகளை வழங்க உள்ளது. ஒவ்வொரு கமிட்டியிலும், 10 முதல் 15 பேர் உறுப்பினர்களாக இருப்பர். மேற்கண்ட துறைகளில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க, இந்த கமிட்டி உறுப்பினர்கள் உதவி செய்வர்.