சீன விசா பண மோசடி வழக்கு விசாரணைக்கு கார்த்தி ஆஜர்
புதுடில்லி, சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்தது தொடர்பான பண மோசடி வழக்கில், விசாரணைக்காக, புதுடில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும், காங்., - எம்.பி.,யுமான கார்த்தி நேற்று ஆஜரானார்.கடந்த 2011ல், காங்., மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அவரது மகனும், தமிழகத்தின் சிவகங்கை தொகுதி எம்.பி.,யுமான கார்த்தி, தன் செல்வாக்கை பயன்படுத்தி, நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த, 263 பேருக்கு விதிமுறைகளை மீறி, 'புராஜெக்ட் விசா' எனப்படும், பணிக்கான விசா வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவர், 50 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக கூறப்பட்டது. வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த, 'தல்வாண்டி சபோ பவர் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் ஒப்பந்த பணிகளுக்காக சீனர்களுக்கு கார்த்தி விசா வாங்கி தந்ததாக தெரிவிக்கப்பட்டது.இது குறித்து வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், கடந்த 2022ல், கார்த்திக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி, அவரது நெருங்கிய கூட்டாளி பாஸ்கரராமனை கைது செய்தனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, புதுடில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், கார்த்தி நேற்று ஆஜரானார். ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக, கடந்த டிச., 23ல் கார்த்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். இது, கார்த்திக்கு எதிரான மூன்றாவது பண மோசடி வழக்கு ஏற்கனவே அவர் மீது, ஐ.என்.எக்ஸ்., மீடியா மற்றும் ஏர்செல் - -மேக்சிஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.