GEN Z வாக்காளர்களை தூண்டி விடும் ராகுல்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஓட்டு திருட்டு என்று கூறி ஜென் இசட் (GEN Z) எனப்படும் இளம் வாக்காளர்களை காங்கிரஸ் எம்பி ராகுல் தூண்டி விடுகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ குற்றம்சாட்டியுள்ளார்.பீஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நாளை (நவ.,6) நடைபெற உள்ள நிலையில், ஹரியானாவில் ஓட்டு திருட்டு நடந்துள்ளதாக காங்., எம்பி., ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். 25 லட்சம் போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் புகார் கூறியுள்ளார். ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ பதில் அளித்துள்ளார். டில்லி பாஜ அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; தேர்தல் ஆணையம் பற்றி நான் பேசமாட்டேன். ஏனென்றால், அவர்களே தங்கள் தேர்தல் நடைமுறைகளை பற்றி விளக்கம் அளிப்பார்கள். பாஜவின் பெயர் குறிப்பிடப்பட்டது. எனவே அதற்கு நான் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். பீஹாரில் தேர்தல் நடைபெறும் நிலையில், ஹரியானாவில் ஓட்டுத் திருட்டு என்று குற்றம்சாட்டி வருகிறார். ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் ஓட்டுச்சாவடி முகவர்களே எந்தப் புகாரும் அளிக்கவில்லை. காங்கிரஸின் தோல்வியை மறைக்க ராகுல் அவதூறு பரப்புகிறார். தேர்தல் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் இப்படி பேசி வருகிறார். ஓட்டு திருட்டு என்று கூறி, ஜென் இசட் (GEN Z) வாக்காளர்களை தூண்டி விடுகிறார் ராகுல். இளம் வாக்காளர்கள் எப்போதுமே பிரதமர் மோடியின் பக்கம் இருக்கின்றனர். எங்களின் தலைவர்கள், தொண்டர்கள் கடினமாக உழைக்கின்றனர். இதன் காரணமாக நாங்கள் வெற்றி பெறுகிறோம். எந்தவித முறைகேட்டையும் நாங்கள் செய்யவில்லை. தேர்தல் பிரசாரத்திற்காக, பல மாதங்கள் பாஜ தொண்டர்கள் வீடுகளை விட்டு, வெளியே தான் இருக்கின்றனர். நான் இதுவரையில் 7 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். எங்களுக்கும் வேட்பாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் உள்ளனர். எங்காவது தேர்தல் விதிமீறல்கள் நடக்கிறதா? என்று நாங்களும் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறோம். ஏதேனும் தவறு நடந்தாலோ அல்லது ஒரு அதிகாரி தவறு செய்தாலோ, நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம்.நாட்டின் உண்மையான பிரச்னையை எதிர்கொள்வதற்கு பதிலாக கவனத்தை திசைதிருப்பும் உத்தியை ராகுல் கையாளுகிறார். ராகுல் தனது தோல்வி, பலவீனங்களில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஆணையம் மீது குற்றம்சாட்டுகிறார். தனது பலவீனங்களை மறைக்க மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது பழிபோடுகிறார். தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்பதே ராகுலுக்கு பழக்கமாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.