சபரிமலையில் நாளை மண்டல பூஜை தங்க அங்கி இன்று வருகை
சபரிமலை:சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடைபெறுகிறது. நவ., 16-ல் துவங்கிய மண்டல கால சீசன், சபரிமலையில் நாளையுடன் நிறைவு பெறுகிறது. நாளை பகல், 12:00 முதல் 12:30க்கு இடைபட்ட முகூர்த்தத்தில் மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் அய்யப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பவனி, இன்று மதியம் பம்பை வந்தடைகிறது.மாலை, 3:00 மணி வரை பம்பை கணபதி கோவில் முன்புறம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். அதன் பின்னர் பெட்டகத்தில் அடைக்கப்பட்டு சன்னிதானம் கொண்டு வரப்பட்டு, அய்யப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது.நாளை மதியம், 12:00 மணிக்கு களபாபிஷேகத்துக்கு பின், மீண்டும் அய்யப்பன் விக்கரகத்திற்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, மண்டல பூஜை நடைபெறும். தங்க அங்கி வருகை, மண்டல பூஜையை ஒட்டி பக்தர்களுக்கு இன்றும், நாளையும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இன்று 50,000, நாளை 60,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இன்று மதியம் 1:00 மணிக்கு பின் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வர முடியாது. தங்க அங்கி பம்பையில் இருந்து புறப்பட்டு, சரங்குத்தி கடந்த பின்பே, பம்பையில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.