உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த தலைமுறை துருவ் ஹெலிகாப்டர் அறிமுகம்; நம் விமான தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்

அடுத்த தலைமுறை துருவ் ஹெலிகாப்டர் அறிமுகம்; நம் விமான தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே உருவான அடுத்த தலைமுறை, 'துருவ்' ஹெலிகாப்டரை விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று அறிமுகம் செய்தார். இந்த ஹெலிகாப்டரை கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் உருவாக்கி உள்ளது. விமான போக்குவரத்து சேவை சாமானிய மக்களை எட்டும் லட்சியத்துடன், அதிநவீன திறனுடன் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சமவெளி, மலைப்பகுதிகள், வனப்பகுதிகள் என நம் நாட்டின் பன்முக நிலப்பரப்புகளில் துருவ் ஹெலிகாப்டரை திறம்பட பயன்படுத்த முடியும். ராஜஸ்தான் பாலைவனம், பருவமழை தவறாது பொழியும் மேற்கு தொடர்ச்சி மலை, ஆக்சிஜன் குறைவான லடாக் பனிமலை என, எந்தப் பகுதிக்கும் இந்த ஹெலிகாப்டர் விரைவாக செல்லும். இமயமலையின் பனிபடர்ந்த பகுதிகளை ரசிக்க மட்டுமின்றி, குக்கிராமத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை மருத்துவ அவசர உதவிக்காக நகரத்துக்கு அழைத்துச் செல்லவும், 'ஏர் ஆம்புலன்ஸாக' இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும். சர்வதேச விமான போக்குவரத்து சந்தைக்கு தேவையான பாதுகாப்பு தரத்துடன், நம் மண்ணில் துருவ் ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டு உள்ளது. இதெல்லாம் புது வசதிகள்! * உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, '1எச் - 1சி' இன்ஜின் * சுதேசி தயாரிப்பு இன்ஜின் என்பதால் பராமரிப்பு செலவு குறைவு * விமானிகள் அமரும், 'காக்பிட்' அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது * விமானங்களுக்கு, ஏ.எஸ்., - 4 தரச்சான்று பெற்ற இந்திய ஹெலிகாப்டர் தான் துருவ் * தரச்சான்று உள்ளதால் சர்வதேச விமான சந்தையில் துருவ் எளிமையாக போட்டியிடும் * ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது சிரமம் ஏற்பட்டால், பயணியரை பாதுகாக்கும் வகையில் இருக்கைகள் வடிவமைப்பு * விபத்துகள் நிகழும் போது எரிபொருள் டாங்குகள் வெடித்து சிதறுவதை தடுக்கும் வகையில் 'சீல்' செய்யப்பட்டுள்ளன * இரட்டை இன்ஜின் இருப்பதால், ஒன்று பழுதானாலும் மற்றொரு இன்ஜின் மூலம் பாதுகாப்பாக தரையிறக்க முடியும் * அதிநவீன அதிர்வு கட்டுப்பாட்டு அமைப்பும் துருவ் ஹெலிகாப்டரில் இருக்கிறது. இதனால் மணிக்கு 285 கி.மீ., வேகத்தில் பறந்தாலும், டம்ப்ளரில் தண்ணீர் இருந்தால் ஒரு சொட்டு கூட சிந்தாது * ஒரே சமயம், டில்லியில் இருந்து ஜெய்ப்பூர் சென்றுவிட்டு திரும்பும் திறன் பெற்றது * சாலைகள் இல்லாத மலை பாங்கான பகுதிக்கும் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் * 5.5 டன் எடை கொண்ட துருவ், 1,000 கிலோ வரை சுமந்து செல்லும் ஆற்றல் உடையது * இதில், 14 பயணியர் வரை செல்ல முடியும். இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம் * மருத்துவ அவசரம், குக்கிராமங்களுக்கு செல்வது, தொழில் ஆதரவு என பன்முக பயன்பாட்டுக்கு ஏற்றதாக துருவ் உருவாக்கப்பட்டுள்ளது * நம் விமான போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத்தில், துருவ் ஹெலிகாப்டர் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ