எல்லையில் பாக்., ராணுவம் 7வது நாளாக அத்துமீறல்
ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், பஹல்காம் என்ற இடத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 இந்திய சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர்.இதையடுத்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா ரத்து செய்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, எல்லை பகுதியில் பாக்., ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஏழாவது நாளாக நேற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். முதலில் சிறு ஏவுகணைகளை வீசியும், அதன்பின் சரமாரியாக இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்திய பகுதிகளான குப்வாரா, பாரமுல்லா, யூரி, அக்னுார் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தி வரும் பாக்., ராணுவத்தினருக்கு, இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.