| ADDED : நவ 28, 2025 09:13 PM
புதுடில்லி: காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் தோற்றவர்கள். அவர்கள் தலைமைப்பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என அக்கட்சியின் மறைந்த மூத்த தலைவர் அஹமது படேலின் மகன் கூறியுள்ளார்.குஜராத்தை சேர்ந்தவர் அஹமதுபடேல். காங்கிரஸ் மூத்த தலைவரான இவர், அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு நெருக்கமானவராகவும், அவரின் அரசியல் ஆலோசகராகவும் இருந்தார். அவர் கடந்த 2020ம் ஆண்டு நவ.,25ல் காலமானார். அவரது மகன் பைசல் அஹமது. காங்கிரசில் இருந்த அவர், தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து விலகினார். வேறு கட்சியில் அவர் சேரவில்லை.இந்நிலையில் பீஹாரில் ஏற்பட்ட சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்வி குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: எதிர்க்கட்சிகளின் நோக்கங்களுக்கு இடையூறாக உள்ளதாலும், ஜனநாயகத்தை விரிவுபடுத்த மாற்றம் தேவை என்பதாலும் ராகுலும், பிரியங்காவும் ஒதுங்கிச் செல்ல வேண்டும். இருவரும் தகுதியற்றவர்கள். அவர்கள் தோல்வியடைந்தவர்கள். எனவே அவர்கள் ஒதுங்க வேண்டும். கட்சியின் தலைமை சசிதரூர் அல்லது உரிய தலைவர்களிடம் சேர வேண்டும். ராகுல், பிரியங்காவை விட அவர்கள் 25 மடங்கு திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் அளித்த பேட்டி ஒன்றில், கட்டுப்பாட்டை மீறிய ஆலோசகர்கள் தரும் கருத்துகளால் கட்சி பாதிப்படைகிறது. அனுபவம் வாய்ந்த மற்றும் நல்லெண்ணம் கொண்ட விசுவாசிகளை அந்நியப்படுத்தும் வகையில் அந்த ஆலோசகர்கள் ராகுல் மீது செல்வாக்கு செலுத்தி வருகின்றனர் எனக்கூறியிருந்தார்.