2 குழந்தை இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம் விதியை தளர்த்தியது தெலுங்கானா
ஹைதராபாத்: இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிபந்தனையை தெலுங்கானா அரசு நீக்கியுள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்னதாக ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள நபர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த சட்டத்தை நீக்குவது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து தெலுங்கானா வருவாய்த்துறை அமைச்சர் சீனிவாச ரெட்டி கூறியதாவது: இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிபந்தனை தேவையில்லாதது. எனவே இந்த தடையை நீக்க மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள வேட்பாளர்களை இனி தகுதிநீக்கம் செய்ய முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.