அசாம் ரைபிள்ஸ் வீரர்களை கொன்ற பயங்கரவாதி கைது
இம்பால்: மணிப்பூரில் கடந்த 19ல் அசாம் ரைபிள்ஸ் படைவீரர்கள் இருவரை சுட்டுக்கொன்ற பயங்கரவாத குழுவை சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டம் நம்போல் பகுதியில். அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனம் மீது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கடந்த 19ல் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரு வீரர்கள் உயிரிழந்தனர்; ஐந்து வீரர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்பியோடினர். இந்நிலையில், காமெங் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து இம்பால் மேற்கு, பிஷ்ணுப்பூர், அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் நேற்று அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த கெய்லால், 47, என்ற பயங்கரவாதி பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 19ம் தேதி அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் வாகனத்தை தாக்கிய முக்கிய குற்றவாளி அவர் என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின்படி தாக்குதலுக்கு பயன்படுத்திய ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மற்ற குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து தேடுகின்றனர்.