உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அருணாச்சல பிரதேசம் குறித்த உண்மை நிலையை மாற்ற முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி

அருணாச்சல பிரதேசம் குறித்த உண்மை நிலையை மாற்ற முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. இது ஒரு வெளிப்படையான உண்மை. சீனா எவ்வளவு மறுத்தாலும், இதனை மறுக்க முடியாது,'' என இந்தியா தெரிவித்துள்ளது.வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெமா வாங்ஜாம் தாங்டாக் என்பவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் வசித்து வருகிறார். கடந்த 21ல், லண்டனில் இருந்து ஜப்பானுக்கு விமானத்தில் அவர் புறப்பட்டார். வழியில், ஓய்வுக்காக சீனாவின் ஷாங்காய் நகரில் விமானம் நிறுத்தப்பட்டது. அப்போது, அவரது பாஸ்போர்ட்டை பறித்த சீன குடியேற்ற அதிகாரிகள், அருணாச்சல பிரதேசத்தில் பிறந்ததால் பாஸ்போர்ட் செல்லாது என்றனர். 18 மணி நேரம் உணவு, குடிநீர் தராமல், தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சமூக வலைதளத்தில், சமீபத்தில் பெமா குற்றஞ்சாட்டினார். மேலும் இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கும் அவர் கடிதம் அனுப்பினார். இச்சம்பவத்தை கவனத்தில் எடுத்த வெளியுறவு அமைச்சகம், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், 'அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஓர் அங்கம். அங்கு வசிப்பவர்கள் இந்திய பாஸ்போர்ட்டுடன் வெளிநாடுகளுக்கு செல்ல தகுதி வாய்ந்தவர்கள்' என்றது. இந்நிலையில் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது: அருணாச்சல பிரதேசத்தில் இருந்து வந்த பெமா என்பவருக்கு எங்கள் அதிகாரிகள் எந்த தொல்லையும் கொடுக்கவில்லை; தடுப்புக் காவலிலும் வைக்கவில்லை. மேலும், அவரது பயணத்தை தடுக்கவும் இல்லை. ஷாங்காய் விமான நிலையத்தில் அவருக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. ஓய்வுக்கு இடமும் தரப்பட்டது. சீன எல்லை கண்காணிப்பு அதிகாரிகள் சட்ட விதிகளின்படியே அவரிடம் விசாரணை நடத்தினர். தவிர, ஜங்னான் சீனாவுக்கு சொந்தமானது. இந்தியாவால் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட அருணாச்சல பிரதேசத்தை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். அருணாச்சல பிரதேசத்தை ஜங்னான் அல்லது தெற்கு திபெத் என, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

பதிலடி

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியக் குடிமகன், ஷாங்காய் வழியாக ஜப்பான் செல்லும் போது கைது செய்யப்பட்டது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையை பார்த்தோம்.அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். இது ஒரு வெளிப்படையான உண்மை. சீனா எவ்வளவு மறுத்தாலும் இந்த மறுக்க முடியாத உண்மை நிலையை மாற்ற முடியாது. இந்தியக் குடிமகன் தடுத்து வைக்கப்பட்டது குறித்து சீனாவிடம் வலுவாக எடுத்துரைத்துள்ளோம். தங்களது நடவடிக்கைகள் குறித்து சீன அதிகாரிகளால் தெளிவாக விளக்க முடியவில்லை. சீன அதிகாரிகளின் நடவடிக்கைகள், விசா இல்லாத போக்குவரத்தை அனுமதிக்கும் விதிமுறைகளை மீறுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை