| ADDED : ஆக 01, 2024 10:57 PM
புதுடில்லி:டில்லியில் பெய்த கனமழையால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகளும் பயணியரும் அவதிப்பட்டனர்.டில்லியில் புதன்கிழமை மாலை பெய்த கனமழை குழப்பத்தை கட்டவிழ்த்துவிட்டது. நகரின் பெரும்பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதன் எதிரொலியாக பெரும்பாலான பகுதிகள் முடிவில்லாத போக்குவரத்து நெரிசலால் திணறின. மக்கள் சிக்கித் தவித்தனர்.நகரின் பல்வேறு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்திருந்ததால், வேறு சாலையை பயன்படுத்தும்படி, பல இடங்களிலும் வாகன ஓட்டிகள் திருப்பிவிடப்பட்டனர்.ரோஹ்தக் சாலையில் நங்லோயிலிருந்து திக்ரி பார்டரை நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் முண்ட்காவில் உள்ள சாலையில் அதிக நீர் தேங்கியுள்ளதாலும், பள்ளங்களாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஐ.டி.ஓ., ராஜ்காட், மதர் டெய்ரி, கணேஷ் நகர், பட்பர்கஞ்ச் சாலை உள்ளிட்ட பல பகுதி சாலைகளில் நேற்று காலை வரை தண்ணீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பல சாலைகளில் மரங்கள் விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நேற்று காலை 7:00 மணி வரை, டில்லி காவல்துறைக்கு போக்குவரத்து நெரிசல் தொடர்பாக 2,945 அழைப்புகள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் தேங்கியதாக 127 அழைப்புகள், மரங்கள் விழுந்ததாக 50 அழைப்புகள் வந்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.