இரு பயங்கரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை
ஜம்மு, :ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பது பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, கரி கர்மாரா பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன், பாக்., பகுதிக்குள் இருந்து, நம் எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கண்காணித்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்களும் திருப்பிச் சுட்டனர். நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில், இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில், துப்பாக்கி சண்டை நடைபெற்ற பகுதியில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.