புதுடில்லி: சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தில் பார்சிக்கள், கிறிஸ்துவர்களுக்கு குடியுரிமை வழங்கும்போது, முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் வழங்கவில்லை என்ற கேள்விக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டி:இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாக்., மக்கள் தொகையில் ஹிந்துக்கள் 23 சதவீதமாக இருந்தனர். இப்போது, 3.7 சதவீதம் மட்டுமே ஹிந்துக்கள் உள்ளனர்.மீதம் இருந்தவர்கள் எங்கே போயினர்; அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை. அந்நாட்டில் அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்.வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலும் இதே நிலைதான். அந்த மூன்று நாடுகளும் முஸ்லிம்களுக்கு என பிரித்து கொடுக்கப்பட்டு விட்டன. இனி, அது நம் நாட்டின் ஒரு பகுதி அல்ல. நம் நாடு, ஒன்றுபட்ட அகண்ட பாரதமாக இருந்தபோது, நம் சகோதர - சகோதரிகளாக, தாயாக இருந்தவர்கள் இன்றைக்கு அங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியது தார்மீக மற்றும் அரசியலமைப்பு ரீதியாக நம் பொறுப்பு என நம்புகிறேன். அதேபோல, ஷியா, பலோச், அஹமதியா பிரிவினரும் உலகம் முழுதும் முஸ்லிமாக கருதப்படுகின்றனர். அதனால்தான் அவர்கள் இதில் இடம்பெறவில்லை. மேலும், இந்திய குடியுரிமை கேட்டு உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களை கருத்தில் வைத்து, அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும். சி.ஏ.ஏ.,வை பொறுத்தவரை, தகுதி வாய்ந்த ஆவணங்களின்றி, எல்லை கடந்து வந்த சிறுபான்மையினரை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம்.முறையான ஆவணங்களின்றி எல்லை தாண்டி வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். ஆனால், 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் முறையான ஆவணங்களை வைத்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
கெஜ்ரிவாலுக்கு பதில்
''சி.ஏ.ஏ., அமலுக்கு வந்துள்ளதால், சுதந்திரத்துக்குப் பின் நடந்த இடப்பெயர்வை விட, அதிக அளவிலான இடப்பெயர்வு தற்போது நடக்கும். நாட்டின் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும். திருட்டு, பாலியல் பலாத்காரம் அதிகரிக்கும். நம் மக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும்,'' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளித்த அமித் ஷா கூறியதாவது:ஆம் ஆத்மியின் ஊழல்கள் வெளிப்பட்டு விட்டதை அடுத்து, முதல்வர் கெஜ்ரிவால் பொறுமை இழந்துவிட்டார். குடியுரிமை பெறப்போகும் அனைவரும் ஏற்கனவே நம் நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்கள் என்பதை அவர் மறந்துவிட்டார். நாட்டு நலனில் அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவோர் குறித்தும், மியான்மரில் இருந்து ஊடுருவும் ரோஹின்யாஸ் குறித்தும் அவர் வாய் திறக்காதது ஏன்? சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்களுக்கு எதிராக மட்டும் ஏன் குரலை உயர்த்துகிறார்? வரும் லோக்சபா தேர்தலில் அவருக்கு தக்க பதிலை மக்கள் அளிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.