| ADDED : டிச 20, 2024 03:38 PM
புனே; புனேயில் பஸ்சில் மதுபோதையில் சீண்டிய நபரின் கன்னத்தில் 26 முறை பளார்விட்ட ஆசிரியையின் வீடியோ வைரலாகி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; புனேயில், சீரடிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்றில் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றி வரும் பிரியா லஷ்க்ரே என்பவர் குடும்பத்துடன் பயணம் செய்துள்ளார். அப்போது அதே பஸ்சில் இருந்த ஒருவர் பிரியா லஷ்க்ரேவை சீண்டியதாக தெரிகிறது.ஒரு கட்டத்தில் அந்த குடிபோதை நபரின் செயலால் ஆத்திரம் அடைந்த பிரியா லஷ்க்ரே செய்த காரியம் தான் இப்போது இணையத்தில் வைரலாகியது. போதை நபருக்கு தகுந்த பாடம் கற்பிக்க எண்ணி, அவரது சட்டையை இழுத்துப் பிடித்து அடிக்க ஆரம்பித்தார். அதுவும் ஒன்று, இரண்டு அடி அல்ல. மொத்தம் 26 முறை அவரது கன்னத்தில் பளார் விட்டுள்ளார்.இந்த பளார் சம்பவத்தை அதே பஸ்சில் பயணித்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய, அந்த வீடியோ இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது. அதன் பின்னர், அந்த போதை நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். ஆனால், போலீஸ் ஸ்டேஷனில் யாரும் இல்லாமல் போக, அனைவரும் காத்திருந்தனர். 30 நிமிடம் கழித்து போலீசார் வர, அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து அனைவரும் விளக்கிக் கூறினர். பின்னர், இருதரப்பினரும் பரஸ்பரம் சமாதானமாக போவதாக கூற, வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டனர்.