நீர், மண் வளத்தை மேம்படுத்துவதற்கான படிப்பு...
நீரின்றி அமையாது உலகு என்று சொல்வார்கள். இயற்கையின் கொடைகளில் ஒன்றான நீர்வளத்தை மனிதர்கள் முன்னெப்போதையும் விட வேகமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள். வற்றாத ஜீவ நதிகள் என்றழைக்கப்பட்ட நதிகள் கூட இன்று ஆண்டின் பல மாதங்கள் வற்றி விடுகிறது. இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான கங்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாசுபட்டு விட்டதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொண்டைத் தண்ணீர் வற்ற கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மழை பெய்யும் போது அதனை சேமித்து வைப்பதற்காக கட்டப்பட்ட அணைகளும், ஆண்டின் பல மாதங்கள் பாதிக்கும் குறைவான தண்ணீருடன் தான் காட்சியளிக்கின்றன. பருவநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் மழையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. உலகமயமாக்கல், நகரமயமாக்கல் காரணமாக விவசாயத்திற்கு கிடைத்து வந்த தண்ணீர் தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களுக்கான பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விடுகிறது. இதனால், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இதுவரை உலகளவில் இரண்டு மகா யுத்தங்கள் நடந்து முடிந்து விட்டன. மூன்றாவது உலகப் போர் மூண்டால், அணு ஆயுதப் பயன்பாட்டால் உலகம் அழிந்து விடும் என்று நம்பப்படுகிறது. இதனால், எந்த நாடும் போர் தொடுக்காது என்று தற்போது சொல்லப்பட்டாலும், எதிர்காலத்தில் தண்ணீர்த் தேவைக்காக உலக யுத்தம் ஏற்படும் என்பதே பலரது அச்சமாக இருக்கிறது. இத்தனை பெருமைகளும், சக்தியும் வாய்ந்த நீர் வளத்தை பாதுகாப்பதற்கும், அதனை முன்பிருந்த அளவுக்கு மேம்படுத்துவதற்கும் பிரத்யேக படிப்புகள் உள்ளன. இதற்கு WATERSHED MANAGEMENT என்று பெயரிடப்பட்டுள்ளது. நீர் வளத்தையும், மண் வளத்தையும் ஒருங்கிணைந்து மேம்படுத்தும் இந்தப் படிப்பு இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என இரண்டு விதத்தில் கற்பிக்கப்படுகிறது. டெல்லி இக்னோ பல்கலைக்கழகத்தின் School of Agriculture, ராஜஸ்தானின் Kota நகரில் உள்ள Vardhaman Mahaveer திறந்த நிலை பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் உள்ள Higginbotom விவசாயக் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் இந்தப் படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தப் படிப்பை விரும்பும் மாணவர்கள், சமூக முன்னேற்றத்திற்கும், நீர்வள மேம்பாட்டிற்காகவும் பணியாற்ற முடியும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், நீரின் தேவை மிக முக்கியமானது என்பதால், இந்த துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகளும் அடுத்த சில ஆண்டுகளில் உருவாகும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். தற்போதைய நிலவரப்படி Watershed Management படிப்பை முடித்தவர்களுக்கு, அவர்களின் பணி அனுபவத்திற்கு ஏற்ப மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் வரை மாத ஊதியமாக கிடைக்கிறது. மண் வள மேம்பாடு, நீர்வள மேம்பாடு, தோட்டக்கலைத் துறை, விவசாயத்துறையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இந்தப் படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. மழை நீர் சேகரிப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் இந்தப்படிப்பின் தேவை அவசியம் என்பதால் இனி வரும் காலங்களில் இந்தப் படிப்புக்கான மவுசு நிச்சயம் அதிகரிக்கும்.