உள்ளூர் செய்திகள்

படிப்புக்கு எது தடை?

மாணவர்களின் கல்விக்கு, பாதிப்பு ஏற்படுத்துவதில் முன்பெல்லாம் டிவி முக்கிய பங்கு வகித்தது. அவர்களின் தேர்வு முடிவுகளும் பாதிக்கப்பட்டன. சில பெற்றோர், தேர்வு நேரங்களில் வீடுகளில் இருக்கும் கேபிள் தொடர்பையே துண்டித்து விடுவர். அந்தளவு டிவியின் தாக்கம் இருந்தது. அறிவியல் வளர்ச்சியால், தற்போது மாணவர்களின் படிப்புக்கு தடையாக விளங்குவதில் டிவியை முந்தி விட்டன பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள். இன்று பெரும்பாலான மாணவர்களிடம், கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. இன்டர்நெட் வசதியும் பெருகிவிட்டன. இதன் மூலம் நன்மைகள் அதிகம்தான். இருப்பினும் அதனை யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு பெறாமல் இருக்கிறோம். இன்று மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் கூட, பேஸ்புக்கில் அக்கவுன்ட்(பயனர்) வைத்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதிலிருந்து சமூக வலைதளங்களின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை உணர முடியும். மாணவர்கள், இளைஞர்கள், வேலை பார்ப்பவர்கள் என வயது வித்தியாசமின்றி, ஒரு நாளில், பெரும்பாலான நேரம், சமூக வலைதளங்களின் முன்பு உள்ளனர். இதில் நண்பர்களின் பக்கங்கள், போட்டோ, வீடியோ, சாட்டிங், மியூசிக் என பல வசதிகள் உள்ளன. தொலைந்து போன நண்பர்கள் வட்டத்தை, இதன் மூலம் திரும்ப பெற முடிகிறது. இதில் நன்மை இருந்தாலும் எந்த ஒரு விஷயமும், அதன் எல்லையை மீறாத வரை மட்டுமே நன்மை பயக்கும். சமீப காலமாக பேஸ்புக் மூலம் பல மோசடிகள் நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அறிவியல் முன்னேற்றம் என்பது வளர்ச்சிக்கு மட்டுமே பயன்பட வேண்டும். அப்போது தான் அந்த கண்டுபிடிப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறும். கண்காணிப்பு அவசியம் பத்தாம் வகுப்பில் 450 மார்க் வாங்கியவர்கள் கூட, பிளஸ் 2 வில் குறைவான மதிப்பெண்ணே பெறுகின்றனர். இதற்கு விடுமுறை, ஓய்வு நேரத்தில் மணிக்கணக்கில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதே முக்கிய காரணம். மாணவர்களுக்கு, படிக்கும் காலத்தில், இதற்கான அவசியமே இல்லை என அறிவுறுத்துகின்றனர் கல்வியாளர்கள். பெற்றோர், பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர், மொபைல் போன் உள்ளிட்டவற்றை, வயதைப் பொறுத்து வாங்கி தர வேண்டும். இதன்மூலம் அவர்கள் வழிதவறி செல்கிறார்களா, என்பதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களும், பள்ளிப் பருவத்தில், படிப்புக்கு தேவையானதை மட்டும் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்த வேண்டும். மாறாக, சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி, எதிர்கால வாழ்க்கையை தொலைத்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !