கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ., படிப்புகள் மீது மாணவர்களுக்கு அதிகரிக்கும் ஆர்வம் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறு
மதுரை: கல்லுாரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ., படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்வதால் அப்படிப்புகளுக்கு 'டிமாண்ட்' அதிகரித்துள்ளது. அதே நேரம் பி.ஏ., வரலாறு, பி.எஸ்.சி., தாவரவியல், கணிதம், வேதியியல், இயற்பியல் மீதான மோகம் குறைந்துள்ளது.மதுரையில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகளிலும் 2026 - 27ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்படைந்துள்ளது. இந்தாண்டு ஏ.ஐ., கம்ப்யூட்டர் சயின்ஸ், மிஷின் லேர்னிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் அண்ட் பின்டெக், டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பை அள்ளித்தரும் படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக ஏ.ஐ., தொடர்பான படிப்புகள் பெற்றோர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளன.பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஏ.ஐ., அண்ட் எம்.எல்., பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் அண்ட் பின்டெக், கணக்கியல் மற்றும் நிதி, கார்ப்பரேட் செயலகவியல், பி.பி.ஏ., டிஜிட்டல் மார்க்கெட்டிங், நெட் ஒர்க்கிங், டேட்டா சயின்ஸ், வணிக மேலாண்மை, கேட்டரிங் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளும் பெரும்பாலான கல்லுாரிகளில் நிரம்பிவிட்ட சூழல் காணப்படுகிறது.பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கூறியதாவது: தொழில் நுட்பங்கள் வளர்ந்தாலும் கோர் இன்ஜி., படிப்புகளுக்கு இன்றும் தேவை அதிகமாகவே உள்ளது. கோர் இன்ஜி., படிப்புகளுடன் ஏ.ஐ., ஐ.ஓ.டி., ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களை மாணவர்கள் கூடுதலாக கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். இதற்கு ஏற்ப வாய்ப்புகளை தரும் கல்லுாரிகளை கண்டறிந்து மாணவர்கள் சேருகின்றனர்.தவிர கலை அறிவியலில் கணினி சார்ந்த படிப்புகளும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் படிப்புகளை தேர்வு செய்வதில் இந்தாண்டு ஆர்வம் குறைந்துள்ளது. கொரோனா தாக்கத்திற்கு பின் கேட்டரிங் படிப்புகளுக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டுள்ளது. ஆங்கிலம், உளவியல், வரலாறு போன்ற படிப்புகளை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் எண்ணத்தில் உள்ள மாணவர்கள் விரும்பி தேர்வு செய்கின்றனர் என்றனர்.