பழங்குடியின இளைஞர் பரிமாற்ற திட்டம் காஞ்சி சங்கரா கல்லுாரியில் நிறைவு விழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கடந்த 19ம் தேதி துவங்கிய, பழங்குடியின இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது.மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 17வது பழங்குடியின இளைஞர் பரிமாற்றத் திட்டம் கடந்த 19ம் தேதி துவங்கியது.இதில், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிஷா மாநிலங்களைச் சேர்ந்த 200 பழங்குடியின மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.நிறைவு நாளான நேற்று காலை, கலாசார போட்டி, பழங்குடி தொன்மங்கள் கண்காட்சி, உள்ளிட்டவை நடந்தது. மாலையில் நடந்த நிறைவு விழாவிற்கு கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமை வகித்தார்.கல்லுாரி செயலர் கிரிஷிகேஷன், தமிழ்த்துறை தலைவர் ராதாகிருஷ்ணன், ராஜிவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மைய இயக்குநர் கோபிநாத், மத்திய அரசின் இளைஞர் நலத்துறை துணை இயக்குநர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மை பாரத் அமைப்பின் மாநில இயக்குநர் செந்தில்குமார் வரவேற்றார்.காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். பேராசிரியை தேன்மொழி நன்றி கூறினார்.