மெட்ரோவிலும் மாணவர்களுக்கு இலவச பாஸ்: பெங்களூரு மெட்ரோ பயணியர் சங்கம் கோரிக்கை
பெங்களூரு: 'அரசு பஸ்களில் பள்ளி, கல்லுாரி மாணவியர்களுக்கு இலவச பாஸ் வழங்குவது போன்று, மெட்ரோவிலும் வழங்க வேண்டும்' என, பெங்களூரு மெட்ரோ பயணியர் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.கர்நாடகாவில் பள்ளி, கல்லுாரி மாணவியர், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் 'சக்தி திட்டம்' நடைமுறையில் உள்ளது. இதுபோன்று தங்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் சிவகுமாரும், மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் அறிவித்து உத்தரவிட்டார்.பெங்களூரு மெட்ரோ பயணியர் சங்கம் வெளியிட்டு உள்ள அறிக்கை:மாநிலம் முழுதும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முடிவு வரவேற்கத்தக்கது. அதுபோன்று இத்திட்டத்தை நம்ம மெட்ரோ ரயில் சேவைக்கும் விரிவுபடுத்த வேண்டும். அவ்வாறு விரிவுபடுத்தினால், நகரில் கல்விக்கான வழியும், பொது போக்குவரத்து பயன்பாடும் மேம்படும்.பெங்களூரின் நகர்ப்புற கட்டமைப்பு மெட்ரோவால் அதிகளவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பல முக்கிய கல்வி நிறுவனங்கள், நுாலகங்கள், பயிற்சி மையங்கள் தற்போது மெட்ரோ வழித்தடங்கள் வழியாக செல்கிறது.இது மாணவர்களின் நிதி சுமையை குறைப்பது மட்டுமின்றி, மாணவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. குறிப்பாக பரபரப்பான நேரங்களில் மிகவும் பாதுகாப்பாக பயணிக்கவும் உதவும்.குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்விக்கு ஒரு போதும் தடையாக இருக்கக்கூடாது. பல சமூக பொருளாதார பின்னணியை சேர்ந்த இளைஞர்கள், நகர் முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிப்பதால், தினசரி பயண கட்டணம் செலவுகள் பற்றி கவலைப்படாமல் படிக்கலாம்.மேலும் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து அமைப்புகளுடன் மாணவர்களை பழக்கப்படுத்தினால் வரும் நாட்களில், தனியார் வாகனங்களை நம்பாமல், பொது போக்குவரத்தில் பயணிக்கலாம். அத்துடன் போக்குவரத்து நெரிசலும் குறையும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.