உள்ளூர் செய்திகள்

இலக்கை அடையும் வரை எதைப்பற்றியும் கவலைப்படக்கூடாது கவர்னர் ரவி அறிவுரை

கோவை: பாரதத்தை கட்டமைக்க - 2047 நோக்கி பயணம் எனும் தலைப்பில், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடன், கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா, கோவையில் நடந்தது.கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில், யங் இந்தியன்ஸ் கோயம்புத்தூர் பிரிவு, பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்கள் மற்றும் சாம்பவி சங்கல்ப் ஐ.ஏ. எஸ்., அகாடமி சார்பில், நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ரவி பங்கேற்று, தேர்வில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:சிவில் சர்வீஸில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் உடல், மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். தினமும், 15 நிமிடமாவது யோகாசனம் செய்ய வேண்டும். நமக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டும். அப்போது தான் கற்றுக்கொள்ள முடியும்.புத்தகங்களை வாசிக்க வேண்டும். தொடர்ந்து உழைக்கும் போது வாய்ப்புகள் தேடி வரும். ஒழுக்கம் வாழ்வில் முக்கியமான ஒன்று. இலக்கை அடையும் வரை எதைப்பற்றியும் கவலைப்படக்கூடாது. சுயக்கட்டுப்பாடு அவசியம். நேரத்தை வீணாக்கும் தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடக்கூடாது.2047ல் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டியுள்ளது. அதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். இளைஞர்களை கட்டமைப்பதில் பிரதமர் பெரும் பங்கு வகிக்கிறார். நீங்கள் தனிமனிதன் இல்லை. நாட்டின் சொத்து. நாட்டை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வது உங்கள் கையில் உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களின் பயிற்சி, படிப்பு மற்றும் தேர்வு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.யங் இந்தியன்ஸ் கோவை கிளை தலைவர் விஷ்ணு பிரபாகர் வரவேற்றார். டில்லி சங்கல்ப் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவனர் சந்தோஷ் தனேஜா, சாம்பவி சங்கல்ப் நிறுவனர் அனுஷ், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்