மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி வழங்க நலம் நாடி செயலி
தேனி: மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வீடுதேடி சென்று கல்வி வழங்குவதற்கு நலம்நாடி அலைபேசி செயலி பயன்பாட்டிற்கு வந்தது.தமிழகத்தில் பள்ளி செல்ல இயலாத மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வட்டார வளமைய பயிற்றுனர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. அதற்காக 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்காக தமிழக அரசு நலம் நாடி என்ற அலைபேசி செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலில் ஆசிரிய பயிற்றுனர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் தற்போதைய நிலையை பதிவேற்றம் செய்யும் வகையில் செயலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கும் பயிற்சிகள், கல்வி சார்ந்த விவரங்கள் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பயிற்றுனர்கள், பிசியோதெரபிஸ்கள் வாரம் மூன்று மாணவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சியை பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்கள் 1607 பேர் உள்ளனர். இவர்களில் பள்ளி செல்ல இயலாத மாணவர்கள் ஆண்டிபட்டி 35, போடி 71, சின்னமனுார் 43, கம்பம் 51, மயிலாடும்பாறை 15, பெரியகுளம் 50, தேனி 61, உத்தமபாளையம் 40 என 366 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் 38பேர், பிசியோ தெரபிஸ்ட் 9 பேர், பேச்சு பயிற்சியாளர் ஒருவர் என 48 பேர் பயிற்சி வழங்க உள்ளனர்.