மதிய உணவில் மிளகாய் பொடி கலந்து மாணவர்களுக்கு விநியோகம்
ஐதராபாத்: பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் பருப்புக்கு பதிலாக மிளகாய் பொடியை கலந்து வழங்கிய சம்பவம் தெலங்கானாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டம் கோத்தபள்ளி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் மதிய உணவுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.இது குறித்த விசாரணையில் கடந்த 2-ம் தேதியன்று வழக்கம் போல பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவில் வெறும் சாதத்தில் மிளகாய் பொடியை கலந்து விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது.அதை சாப்பிட்ட மாணவர்கள் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்கட்சியினர் புகார் கூறினர். அதில் மாணவர்களுக்கு பருப்பு சாதம் என கூறி மிளகாய் பொடியை கலந்து வழங்கியதால் பாதிக்கப்பட்டதாக புகார் கூறினர்.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்த மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டது.