காமராஜ் பல்கலையில் சம்பளமின்றி தவிப்பு; மீண்டும் நிதி நெருக்கடி
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் மீண்டும் நிதி நெருக்கடி பிரச்னை தலைதுாக்கியதால் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு இதுவரை ஜூலை சம்பளம் வழங்கப்படவில்லை.சில ஆண்டுகளாக இப்பல்கலை நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஏராளமான தணிக்கை தடைகள் இருப்பதால் மாநில அரசின் மானியமும் பல்கலைக்கு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் சில மாதங்களாகவே சம்பளம் வழங்குவதில் அவ்வப்போது இழுபறி ஏற்பட்டது.தேர்வு கட்டணம், மாணவர்கள் சேர்க்கை கட்டணம் வசூலிப்பு உள்ளிட்டவற்றில் கிடைத்த வருவாய், தமிழக அரசின் சிறப்பு மானியம் போன்றவற்றால் ஜூன் வரை சம்பளம் வழங்குவதில் சிக்கல் இன்றி நிர்வாகம் சென்றது. நிதி நெருக்கடியால் ஜூலை சம்பளம் தற்போது வரை வழங்காததால் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் பாதித்துள்ளனர்.பல்கலை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல்கலையில் 140க்கும் மேற்பட்ட நிரந்தர பேராசிரியர்கள், 220க்கும் மேற்பட்ட அலுவலர்கள், 300க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள், 1100 ஓய்வூதியதாரர்கள் என மாதம் ரூ.10 கோடி வரை சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது அதற்கான நிதி ஆதாரம் இல்லை. சம்பளம் வழங்க கோரி தமிழக அரசிடம் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.விரைவில் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் நம்பிக்கை உள்ளது. துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது பல்கலை வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. விரைவில் துணைவேந்தர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றனர்.