நீட் தேர்வால் ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு நிறைவேறுகிறது
கோவை: மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், கோவையில் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளில் படித்த பத்து மாணவர்கள், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் தகுதி பெற்றுள்ளனர்.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஜூலை 25ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், கோவையை சேர்ந்த பத்து மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். சேர்க்கை பெறும் மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கான கல்விக்கட்டணத்தை, அரசே ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.கிராமமே மகிழ்ச்சியில் உள்ளது மாணவர் ராஜேஷ் கூறுகையில், என் ஊரான நரிக்கல்பதி (காளியாபுரம் ஊராட்சி) இருந்து டாக்டராகப் போகும் முதல் நபர் நான்தான். என் குடும்பத்திலும் டாக்டர் படிக்கிற முதல் நபர் நானே. பிளஸ் 2ல் 468 மதிப்பெண் பெற்றேன். முதல் முயற்சியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இருந்தாலும், எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என முழு முயற்சியுடன் படித்தேன்.என் பெற்றோர் கூலி வேலைக்கு செல்வதால், அவர்களுக்கு உதவியாக காட்டு வேலைக்கும் சென்றேன். தேர்வுக்கும் தயாரானேன். 405 மதிப்பெண் பெற்று, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. என் ஊர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நான் மருத்துவராகி, என் கிராமத்துக்கு சேவை செய்யப்போகிறேன், என்றார்.நீண்ட நாள் கனவு மாணவி ரம்யா கூறுகையில், சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்துள்ளது. டாக்டராக வேண்டும் என்பது என், நீண்ட நாள் கனவு. எப்படியாவது நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உறுதியுடன், விடாமுயற்சியுடன் படித்தேன்.என் குடும்பத்தில் டாக்டருக்கு படிக்க போகும் முதல் நபர் நான். தமிழ் வழிக் கல்வியில் பயின்றதால், தொடக்கத்தில் சற்று தடுமாறினேன். ஆனால் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டதால், 470 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன், என்றார்.தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்பஹ்மிதா ஷஹாஸ்-பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதூர்; ராஜேஷ் -அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர்; ஹேமதர்ஷினி -அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளியங்காடு; ரம்யா - அரசு மேல்நிலைப்பள்ளி, வாகராயம் பாளையம்; மீரா யாஸ்மின் - அரசு மேல் நிலைப்பள்ளி, மலுமிச்சம்பட்டி; சுபஸ்ரீ -துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜவீதி; மதுமிதா -அரசு மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கால்மண்டபம் யுகஸ்ரீ - வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆனைமலை; இவர்களை தவிர, கோவை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற இரண்டு மாணவர்களும், உள் ஒதுக்கீட்டில் தகுதி பெற்றுள் ளதாக, கல்வி அலுவலர் தாம்ப்சன் தெரிவித்துள்ளார்.