கலைக்காக இலவச மருத்துவக் கல்வியை உதறிய மாணவி
கலைக்காக இலவச மருத்துவக் கல்வியை உதறிய மாணவி புதுச்சேரி மாணவி, கலை மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, அரசு இலவச மருத்துவக் கல்வியை உதறிவிட்டு சுயநிதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். புதுச்சேரியில் மாணவர்களுக்கான முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங் நேற்று துவங்கியது. முதல்வர் ரங்கசாமி, சென்டாக் கன்வீனர் ஜெயக்குமார், சேர்க்கை குழு தலைவர் சிவாஜி உள்ளிட்டோர், மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி, சேர்க்கை அனுமதி சான்றிதழ் வழங்கினர். தரவரிசைப்பட்டியலில், 199 கட்-ஆப் மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்த காரைக்கால் மாணவி சவுந்தர்யா, கவுன்சிலிங்கில் முதலாவதாக பங்கேற்று, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பை தேர்வு செய்தார். இரண்டாம் இடம் பிடித்த பெலிக்ஸ் மேரி ஏஞ்சலோ, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்தார். கவுன்சிலிங் மூன்றாவதாக பங்கேற்ற மாணவி கீர்த்தனா, பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பை தேர்வு செய்தார். அவருக்கு, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்பு கிடைத்தும், வேண்டாம் என மறுத்துவிட்டார். மாணவி கீர்த்தனா கூறுகையில் "படிப்பும், கலையும் இரண்டு கண்களாக பாவிக்கிறேன். எனக்கு பரதநாட்டியத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அரசு மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்பு கிடைத்துள்ள போதிலும், அங்கு கலையைத் தொடர வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்த கலை வசதி, பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சிறப்பாக இருப்பதாக நண்பர்கள் தெரிவித்தனர். அதனால்தான், படிப்போடு கலைக்கு முக்கியத்துவம் அளிக்கும்விதத்தில், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பைத் தேர்வு செய்துள்ளேன்" என்றார். கீர்த்தனா தந்தை கலைச்செல்வன் கூறுகையில், "மகளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்க விருப்பம் இல்லை. அவள் விரும்பியபடி படிப்பிலும், கலைத் துறையிலும் ஒரே நேரத்தில் சாதிக்க வேண்டும்" என்றார்.