பல்கலைக்கழகமாக தரம் உயரும் ‘மாஸ் கம்யூனிகேஷன் இன்ஸ்டிடியூட்’
இந்தியாவில் பத்திரிகையியல் தொடர்பான படிப்புகளை வழங்கும் முன்னணி கல்வி நிறுவனம் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்’ (ஐ.ஐ.எம்.சி.,). இதை நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க பல்கலைக்கழக மானிய குழுவிடம் (யு.ஜி.சி.,) கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்க யு.ஜி.சி., மறுத்துவிட்டநிலையில், மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்காக 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் ரூ. 44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ‘குளோபல் ஸ்கூல் ஆப் ஜர்னலிசம்’ அல்லது ‘வேர்ல்டு மீடியா யுனிவர்சிட்டி’ என பெயர் மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலமாக இனி சொந்தமாக முதுநிலை படிப்புகளையும், பி.எச்டி., படிப்புகளையும் ஐ.ஐ.எம்.சி.,யால் வழங்க முடியும்.