மதுரை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் விளையாட்டு மைதானங்கள்
மதுரை: ராஜிவ்காந்தி விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான செயற்குழுக் கூட்டம், மதுரையில் நடந்தது. கலெக்டர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் பங்கேற்றனர். முதற்கட்டமாக 2014 -15ம் ஆண்டில், மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. தற்போது கொக்குளம் அரசு கள்ளர் பள்ளி, சேடபட்டி, அம்மாபட்டி, கள்ளிக்குடி, தனியாமங்கலம், திருவாதவூர், இ.மலம்பட்டி அரசுப் பள்ளிகளில் விளையாட்டு வளாகம் அமைக்க, விண்ணப்பிக்கப்பட்டது. மத்திய அரசின் 80 சதவீதம், மாநில அரசின் 20 சதவீத பங்களிப்பில், ஒன்றியங்களில் வெளிமைதானம் மற்றும் உள்ளரங்கு அமைக்கப்படும். அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, கல்லுாரிகளில், குறைந்தது ஆறு முதல் ஏழு ஏக்கர் நிலம் தேவை. இங்கு அமைக்கப்படும் ஊராட்சி விளையாட்டு வளாகத்தை பொதுமக்களும் பயன்படுத்த ஒப்புதல் வழங்க வேண்டும். வளாகம் அமைத்தபின் விளையாட்டு உபகரணங்களுக்கு ரூ.1.50 லட்சம், நாற்காலி, மேஜை இதர பொருட்கள் வாங்க ரூ.1.50 லட்சம் வழங்கப்படும். வெளிஅரங்கில் தடகளம், வில்வித்தை, இறகுபந்து, கூடைபந்து, கால்பந்து, ஹேண்ட்பால், கபடி, கோகோ, டென்னிஸ், கபடி, வாலிபால், டெனிகாய்ட் மைதானம் அமைக்க வேண்டும். முக்கியமாக தடகளம், இறகுபந்து, கால்பந்து அல்லது டெனிகாய்ட், கபடி அல்லது கோகோ, வாலிபால் அல்லது கூடைபந்து கட்டாயமாக அமைக்க வேண்டும். உள் விளையாட்டரங்கில் மல்டி ஜிம், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பளுதுாக்குதல் ஆகியவற்றுக்கான இடம் தேவை. விளையாட்டு அலுவலர் முருகன் கூறுகையில், "எட்டு பள்ளிகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. முதன்மை கல்வி அலுவலருடன் ஆய்வுசெய்து, மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு மூன்று பள்ளிகள் தேர்வு செய்யப்படும்" என்றார்.