திறனாய்வு தேர்வில் பங்கேற்க வருமான உச்சவரம்பு அதிகரிப்பு
கிராமப்புற மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று, தற்போது ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தேர்ச்சி பெறுபவர்களுக்கு 11ம் வகுப்பு வரை உள்ள மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 12 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. தேர்வில் கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையில், தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ள பெற்றோர்களது குழந்தைகளும் தேர்வு எழுதலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.