தனியார் பள்ளி மூடல்: போலீசில் பெற்றோர் புகார்
எண்ணுார்: எண்ணுார், பர்மா நகரில், விவேகானந்தா வித்யாலயா தனியார் தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை, 250க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.கடந்த, 25 ஆண்டுகளாக செயல்படும் பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், பள்ளியை நிரந்தரமாக மூடி, ஜோதி நகரில் உள்ள இப்பள்ளியின் மற்றொரு கிளையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டு, பள்ளி தாளாளர் கிருஷ்ணன் தலைமையில், பெற்றோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. பள்ளி மூடல் குறித்த தகவல் கேட்ட பெற்றோர், அதிர்ச்சியடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.ஜோதி நகர் வரை செல்வதற்கு, 4 கி.மீ., துாரம் உள்ளது. கனரக போக்குவரத்து அச்சுறுத்தல் உள்ளது. ஓராண்டு காலம் அவகாசம் வழங்க வேண்டும் என, பெற்றோர் தரப்பில் கோரினர். இருப்பினும், நிர்வாகம் பள்ளியை மூடும் முடிவில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது.இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெற்றோர், 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தமிழரசன் என்ற தம்பையா தலைமையில், நேற்று காலை எண்ணுார் காவல் உதவி கமிஷனர் வீரகுமார், ஆய்வாளர் ரமேஷிடம் புகார் மனு அளித்தனர்.அதில், முன்னறிவிப்பின்றி பள்ளியை மூடுவதாக அறிவித்திருக்கும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியை அதே இடத்தில் தொடர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.