மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் வலியுறுத்தல்
உடுமலை: புதிய கல்வியாண்டில், மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை மைய திட்டம் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டு ஏப்., இறுதி வரை உள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு இரண்டு தேர்வுகள் மட்டுமே மீதமுள்ளது. புதிய கல்வியாண்டை எதிர்நோக்கி, பள்ளி நிர்வாகத்தினரும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.சில கல்வியாண்டுக்கு முன் வரை, மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில், நடமாடும் ஆலோசனை மையத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அரசு பள்ளிகளுக்கென இத்திட்டம் செயல்பட்டது.மாவட்டத்துக்கு ஒரு மையம், ஒரு ஆலோசகர் வீதம் நியமிக்கப்பட்டனர். பல்வேறு சூழ்நிலைகளால் மனதளவில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தும், அவர்களின் பிரச்னைகளை தெளிவுபடுத்தியும்,ஆலோசனை வழங்கப்பட்டது.தேர்வின்போது ஏற்படும் அச்சம், குழப்பத்தை நீக்குவதற்கு மாணவர்களுடன் ஆலோசகர்கள் நேரடியாக உரையாடி நம்பிக்கை ஏற்படுத்தினர். இத்திட்டம் ஆலோசகர்கள் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து சிக்கல் பிரச்னைகளால், தற்போது முற்றிலுமாகவே நடைமுறையில் இல்லை.பள்ளிகளில் இத்திட்டம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய கல்வியாண்டில் இதுபோன்ற மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தவும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோரும் வலியுறுத்தியுள்ளனர்.அவர்கள் கூறியதாவது:மாணவர்கள் கல்வியில் பின்தங்குவதற்கு, உளவியல் பிரச்னைகளும் காரணமாக உள்ளது. குடும்ப சூழல் காரணமாகவும் பாதிக்கப்படுவதால், பெற்றோரிடமும் மாணவர்கள் கூறுவதில்லை.முறையான ஆலோசனை வழங்குவதற்கும், அவர்களுக்கான வழிகாட்டுதலுக்கும் உளவியல் ஆலோசனை வகுப்புகள் வேண்டும். உளவியல் நிபுணர்களைக்கொண்டு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.கல்வித்துறை புதிய கல்வியாண்டில் இதை செயல்படுத்தினால், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, கூறினர்.